Sunday, June 3, 2018

மாற்று நாடகவிழா முடிந்து நேற்று பெங்களூர் திரும்பினேன். திருப்பத்தூர் நண்பர் Tpg Balaji கொடுத்துவிட்ட இரண்டு பலாக்காய்களில் ஒன்று பலாக்காய் பொரியல் (இடிச்சக்கை துவரன்) ஆகிவிட்டது!
ஆக்கம்:: பாரதி மணி.


செய்முறை::
சின்ன பலாக்காய் ஒன்றை தோல் சீவி, பிசின் வரும் நடுத்தண்டையும் களைக. சின்ன சதுரத்துண்டுகளாக்கி உப்பு, மஞ்சள்பொடி, கொஞ்ஞ்சம் சர்க்கரை போட்டு வேகவைக்கவும். ஆறியபின் வடித்தெடுத்து லேசாக கீரைமத்தால் நசுக்கி வைக்கவும்.
அரை மூடித்தேங்காயை திருவி, 1 டீஸ்பூன் சீரகம், 3 காய்ந்தமிளகாய் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் இரு டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் சூடானதும் 3 காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு, 1 டே.ஸ்பூன் உ.பருப்பு, கடுகு போட்டு வெடிக்கும்போது, 2 இணுக்கு கறிவேப்பிலை சேர்த்து, மசித்த பலாக்காயைப்போட்டு கிண்டவும். அரைத்துவைத்த தேங்காய்த்துருவலையும் அதன் தலையில் 'அரோஹரா!' என்று சொல்லிக்கொண்டே தூவவும். "திருச்சிற்றம்பலம்!" என்று சொன்னாலும் ருசியாகத்தான் இருக்கும்!
இருமுறை கிளறி, குளறுபடியில்லாமல் அடுப்பை அணைத்துவிடவும்.
இப்போது உங்கள் முன்னால் இடிச்சக்கை துவரன் ரெடி!









Wednesday, May 23, 2018

சந்திரா ஸ்வாமி!
இருக்கும் ஸ்வாமிகளில் ஒரு ஸ்வாமி நேற்று போய்விட்டார்.....சந்திரா ஸ்வாமி! ஊடகங்களால் Cunning Conman என்று அறியப்பட்டவர். அவர் காட்டில் மழைபெய்த நாட்களில் பிரதமர்களும், முதல்வர்களும் அவர் காலில் விழுந்தார்கள்! அவரால் வளர்த்துவிடப்பட்ட பூதங்கள் அனேகம்.


நம்மில் பலர் சந்திரசேகர், நரசிம்மராவோடு இவரும் போய்விட்டார் என்றே நினைத்திருந்தார்கள். நேற்றைய செய்தி “ஓ! இப்போ தான் போனாரா?’ என்று பலரைக்கேட்கவைத்தது. தன்னுடைய செல்வாக்கு காலாவதியாய்விட்டதென்று தெரிந்துகொண்டு இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகாமல் ஊடகங்களிலிருந்தும் சுத்தமாக விலகிவிட்டார்.

                படத்தில் ரோஷன் ஸேட், மேக்கப்மென் ஜான்ஸன், லீலா நாயுடுவுடன் நான். படப்பிடிப்பின்போது.


தொண்ணூறுகளில் அவர் புகழ் உச்சத்திலிருந்தபோது அவரை ’தரிசிக்கும்’ வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அருந்ததி ராயின் "The Electric Moon" என்ற ஆங்கிலப்படத்தில் என்னோடு சேர்ந்து நடித்த லீலா நாயுடுவுடன் காரில் போய்க்கொண்டிருந்தபோது, ‘மணி! கொஞ்சம் காரை கிரேட்டர் கைலாஷுக்கு திருப்பு. ஸ்வாமிஜியைப்பார்க்கணும்!’ என்றார். போனதும் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் சந்திரா ஸ்வாமியின் ‘இன்ஸ்டண்ட் தரிசனம்’. ‘ஆயியே பெஹன் ஜி! உங்களைப்பார்த்து யுகங்களாகிறது!’ என்று கட்டிப்பிடித்து வரவேற்பு. இல்லையா பின்னே? ஆறு உலக அழகிகளில்ஊ ஒருவராக கருதப்பட்டவர். Householder படத்தில் சசி கபூருடன் ஜோடி...எழுத்தாளர் டாம் மோரியஸின் மனைவி! அவர் என்னை அறிமுகப்படுத்தியவுடன் ஸ்வாமிஜி என்னை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தார்... ....ஏதோ நாய் கொண்டுவந்து போட்டதை பார்ப்பது போலிருந்தது! முதல் பார்வையிலேயே அவரை நானும், என்னை அவரும் வெறுத்தோம்.
அவர் இருந்த அறை பூரா மாலைகளும், தட்டுத்தட்டாக கும்பாரமாக எலுமிச்சம்பழங்களும் இருந்தன. வர்த்தகமுறையில் “மாம்பலம் மாமீஸ்’ ஊறுகாய் போடுமளவுக்கு கண்ணைப்பறிக்கும் எலுமிச்சங்காய்கள்! 
தில்லானா மோகனாம்பாள் வைத்தி போல “அய்யர்வாள்! இந்தாங்கோ!” என்று ஒரு பழத்தை எடுத்து நீட்டுவாரென்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை! ஆமாம்! இந்த ஒரு சாக்கு எலுமிச்சம்பழங்களைக்கொண்டு என்ன செய்வார்? தினமும் நான்குவேளை தலைக்கு தேய்த்துக்கொள்வாரோ? கேட்க தைரியமில்லை!
அரைமணிநேர தற்புகழ்ச்சி உரையாடலுக்குப்பிறகு -- எல்லாமே “நான் தான் அவனுக்கு (நரசிம்ம) ராவ்ஜியிடம் சொல்லி கேஸ் வராமெ முடிச்சேன். இன்னிக்கு நன்றியில்லாமெ இருக்கான்!......நேத்து இதே நேரம் வந்திருந்தா (ஒரு பிரபலம்) இவர பாத்திருக்கலாம். ஒருமணிநேரம் இருந்தார். எங்கிட்டே வந்தவங்களுக்கு நல்லதே பண்ணியிருக்கேன்”....இப்படி.....விடைபெறும்போது நான் எழுந்து வெளியே வந்துவிட்டேன். அவரும் என்னை கண்டுகொள்ளவில்லை!

நான் காரில் ஏறி அமர்ந்தபோது,  அவர் “ட்ரைவர்! Gadi காடி லாவோ!” என்று சொன்னமாதிரி எனக்குப்பட்டது!

இப்படி என் ‘ஸ்வாமி தரிசனம்’ இனிதே நடந்தேறியது!

--00ooo00--

Monday, January 8, 2018

மணி சார்!.... அடுத்த தொகுதியையும் எழுதவேண்டும்-----இன்னும் பத்து ஆண்டுகளுக்குப்பின்...



-----------------------------------------------------இரா.குமரகுருபரன்--------------------------

எவ்வளவு அருமையான நாள் ஜனவரி ஏழு !...பாரதி மணி சாரை விட, அவரது ரசிகர்களுக்கும்........எனக்கும் !  
அவசர அவசரமாக, அலுவலகத்தில் பணியை முடிக்காமலேயே,மவுண்ட் ரோட்டில் வேலை இருப்பதாகச் சொல்லி, அனுமதியுடன் ஏழு மணிக்குக் கிளம்பினேன். பேருந்து 'ஜாமில்' வழுக்கி வந்து புக்-பாயிண்ட் சேர நேரமாகி விட்டது. உள்ளே நுழைந்து புத்தகத்தை காசுகொடுத்து வாங்கிவிட்டு அரங்கில் நுழையும்போது,லெனின் அவர்கள் "புத்தகத்தை காசு கொடுத்து வாங்கினீ ர்களா?" என்று மைக்கில் அவையோரை 'மிரட்டிக்' கொண்டிருந்தார்!...புத்தகத்துடன் நுழைந்த என்னைப்பலரும் கவுரவமாகப் பார்த்ததாக தோன்றிற்று!
"பாரதிக்கு அப்பா" என்று தேவி தியேட்டர் உள்ளரங்கில் பாரதி மணி சார் அவர்களை திரு லெனின் அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய "பாரதி" திரைப்பட 'ப்ரிவியு' நிகழ்வு நேற்று நடந்தது போல இருக்கிறது!...அதற்குள் 14 ஆண்டுகள் ஓடிவிட்டதா! இயக்குநர் ஞான ராஜசேகரன் அவர்கள் இயக்கிய "பாரதி" திரைப்படத்தில் இளையராஜா அவர்களின் பின்னணி இசை அமைதி காத்து நடிகர் சாரங்கபாணி போன்ற வசனத்தைத் தெளிவாக உச்சரித்த சப்தம்!...மராட்டி ஷாயாஜி ஷிந்தேயைப் போன்றே, யார் இந்த மணி என்று எண்ண வைத்துவிட்டது! தேசிய நாடகப் பள்ளி ஆளு(மை) என்று அவர் பற்றி ஒரு 'பிட்'டுப் போட்டுவிட்ட பிறகு என்ன கேள்வி!..ஹபீப் தன்வீர் போன்ற நாடகாசிரியர்கள் நினைவுக்கு வந்தார்கள் அப்போது!
என்ன ஆளுமை! நான் அன்றிலிருந்து அவரை சென்னையின் ஒவ்வொரு கூட்டத்தில் பார்க்கும்போதும் அலட்டலில்லாமல் அரங்கில் எங்கேயோ அமர்ந்திருப்பார்!... பல பிரபலங்கள் அவர் அமர்ந்த இடம் தேடிவந்து பேசிச் செல்வார்கள்!
பேஸ்புக்கில் அவரது நட்புக் கிடைத்தபின்தான் அவரது ஆளுமையின் முழு விஸ்தீரணமும் தெரிந்தது. ரயில்தடம் பதிக்காத அந்தக்காலத்து  நாகர்கோவில்-தில்லிப்பயணம் பற்றிய அவரது கட்டுரை ஒன்று போதும்... 
மெட்றிக் ( சின்ன டைவர்ஷன் : நாகர்கோவில்காரர்கள் கூகிளில் அதிகம் இருப்பார்கள் போல...மெட்ரிக் என்று அடித்தால் மெற்றிக் என்று வருகிறது!) வருவதற்கு முன்னர் ரூபா-.அணா -பைசா என்ற நாணயக் கணக்கு இருந்த காலம்.நல்லவேளையாக நான் 'மூணாப்பு' போகும்போதே ஒழித்துக் கட்டினார்கள்...மாகாணி(1/16), அரைக்கால்(1/8) வாய்ப்பாடு சரியாக ஒப்பிக்காத என் சகவயது மாணவனை வயிற்றைஜவ்வு மிட்டாயாகப் பிடித்து இழுத்து துவைத்து விளாசிய கழுகுமலை பாபநாச வாத்தியார் நினைவுக்கு வருகிறார்.... அதிருக்கட்டும்.
* * *
அடுத்து சாஹித்திய அகாதெமியின் க.நா.சு. அவர்களின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில்அவரது ஹாஸ்ய உணர்வு வெளிப்பட கட்டுரை வாசித்தார். தோழர் ச.தமிழ்செல்வனும் இதில் கலந்துகொண்டு க.நா.சு. பற்றிப் பாராட்டிப் பதிவு செய்தார். ("க.நா.சு.வும் எங்களுக்குத் தாத்தாதான்...எல்லாத் தமிழ்த் தாத்தா 'சட்டே'ல இருந்தும் பேரப்பிள்ளைங்க நாங்க உரிமையோட சில்லரைய எடுத்துச் செலவழிப்போம்ல!...")
க.நா.சு. அவர்களின் மருமகன்தான் பாரதி மணி! ...
* * *
அவர் மனதில் தில்லியிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த சஞ்சலம் மனதினுள் இருந்துகொண்டே இருப்பதை நான் உணர்ந்து கொண்டே இருந்தேன். இவரை சென்னை பண்பாட்டுத் தளம் சரியாகப் பயன்படுத்தவில்லையே என்கிற ஆதங்கம் எனக்குள் உண்டு. எழும்பூர் ம்யூசியம் தியேட்டரில் அவர் இயக்கி நடித்த சுஜாதாவின் "கடவுள் வந்தார்" நாடக அரங்கேற்றத்தின்போது நானும் இயக்குனர் சுகா அவர்களும் அருகருகே அமர்ந்து ரசித்து கருத்துக்கள் பரிமாறிக் கொண்டோம். 'பாட்டையா பாட்டையா' என்று அடிக்கடி பகடி பேசும் சுகா உள்ளுக்குள் நெகிழ்வதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இறுக்கமான முகத்துடன் "அவரு தன்னோட சொந்தக்காசைச் செலவழிச்சு நாடகம் போடறாரு...அதுக்கேத்த ரெஸ்பான்ஸ் கெடைய்க்குமான்னு தெரீல" ன்னு சொன்னபோது மனசு உருகித்தான் போனது.(இவ்வளவு பாசத்தை மனசுக்குள் அடக்கிக் கொண்டு வெளியில் அவரை வம்புக்கு இழுக்கும் சுகா பற்றி பிரமிப்பு ஏற்பட்டது!)
சரி. நிகழ்ச்சி பற்றி ...

லெனின் சார் மைக் பிடித்த இடத்தையே தாளமாக்கி கலக்கிக் கொண்டிருந்தார்...கவிஞர் ரவி சுப்பிரமணியன் மாதிரி இவரும் இசைஇடை வைத்த உரை நிகழ்த்தத் தொடங்கியிருப்பது  வித்தியாசமாகத்தான் இருக்கிறது! அவரது தனி ஸ்டைலில் அந்தக்காலம்... பாரதி மணி என்று 'அப்ளாஸ்' தட்டிக்கொண்டு அசத்தினார். புத்தகம் ஒசீக்கு வாங்கிப்படித்தல் பற்றி அவர் சொன்ன போது கோவில்பட்டி சரஸ்வதி தியேட்டர் அருகிலுள்ள மைதானத்தில் நடிகவேள் எம் ஆர் ராதா அவர்களின் "இரத்தக் கண்ணீர்" நாடகம் பார்க்க கழுகுமலையிலிருந்து வந்தது நினைவுக்கு வந்தது. முன்னாலே உட்கார்ந்த பல நபர்கள் ஓசி டிக்கட்டாக இருப்பதாக உணர்வு வந்து நடிகவேள் சகட்டுமேனிக்குத் திட்டியது ஞாபகம் வந்தது.
திரைப்பட இயக்குநர் சுகா வராது போனதால் அவர் வாழ்த்துச் செய்தியை வம்சி-பவா வாசித்தார்.

கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தனக்கும் மணி சாருக்குமான நட்பை குணாம்சங்களை பாஸ்வல்-டாக்டர் சாமுவல் ஜான்சன் உறவைப்போன்றது என்று சிலாகித்தார். முனைவர் என்பதால் அவரது கட்டுரைகளில் பல ஆழமாக இவரால் அலசப்பட்டது. நிகழ்வுக்கான தேதியில் தமிழச்சி இருக்கவேண்டியதன் அவசியத்தை வற்புறுத்திய மணி சாரை வம்சி-ஷைலஜா முதலிலேயே குறிப்பிட்டிருந்தார்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தான் அவரைக்கண்ட நாள் முதலான தொடர்பு, திரைப்படத்தில் அவரது பாத்திரப்படைப்பு, மணி அவர்களின் பண்பு நலன்கள் குறித்து விவரணையாகப் பேசினார்.மிக நுட்பமாக கட்டுரைகள் பற்றியும், அதன் வரலாற்றுச் சிறப்பையும் பதிவு செய்தார்.
(மணி சார் எல்லாவற்றையும் அவ்வப்போது கவனித்துக் கொண்டே இருந்தாலும் ஒரு பரபரப்பு தென்பட்டதை உணர்ந்தேன்...எல்லாம் என்னவாக இருக்கப் போகிறது- "பாட்டையா பாட்டையா" ன்னு அடிக்கடி கூப்புட்டு என்ன பிரயோஜனம், இந்தப் 'பாவிமக்கா' (சுகா: "பேதீல போவான்" ன்னு நெல்லை பாஷைல திட்டலாமே பாட்டையா ?
மணி: பேராண்டி ஒன்ன அப்படித் திட்டுவானே'டே ..
சுகா: அதானே பாத்தேன்.
மணி: அதவிட மோசமா யோசிச்சிட்டு இருக்கேன்'டே )
வந்து தொலைச்சிருக்கலாமுல்லா ..பெருசா வாழ்த்துச் செய்தி அனுப்பித் தொலைச்சிட்டாருன்னு வீம்பு தென்பட்டது.

"ப்ரண்ட்லைன்" ஆங்கில இதழ் ஆசிரியர் விஜயஷங்கர், -ராஜீவ் மேனோனுக்குப் பதிலாக வரவழைக்கப்பட்டு,நூலைப் பெற்றுக் கொண்டார். தூரத்தில் இருந்து பார்த்த மணி அவர்களின் நட்பு சமீபத்தில்தான் கிடைத்ததில் உண்டான குற்ற உணர்வு அவர் பேச்சில் பிரதிபலித்தது. (நண்பர் விஜயஷங்கர் கேரளா பூர்விகமாயினும், அவரது அத்தான்-சகோதரியின் கணவர் -மதுரை சந்திரசேகரனுக்கு மாமாதான் நெல்லைச்சீமை புதுமைப்பித்தன் என்பதை மணி சாரிடம் பிறகு சொல்ல வேண்டும். ஆனந்தப்படுவார் )

சேலத்தில் வேறொரு துக்க வீட்டுக்குச் சென்று விட்டு நேராக சென்னைக்கு அரங்கத்துக்கே வந்த இலக்கியப் புரவலர் கல்லூரித் தாளாளர் எஸ்கேபி. கருணா மணி அவர்களின் ஆழ்ந்த நாடக ஈடுபாடு குறித்த தமது நேரடி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இறுதியாக மணி சார் ஏற்புரையில், " என் மக ஷைலஜா"ன்னு வாஞ்சையாக த்தொடங்க ஷைலஜாவோ 'இப்படித்தான் பாலு மகேந்திரா சாரும் சொல்லீட்டுப் 'போயிட்டாரு'ன்னு' மனசுக்குள் கலங்கியதும் எனக்குத் தெரிந்தது...
" எல்லாரும் பொய் சொன்னாங்க...எல்லாம் உயர்வு நவிற்சி" என்று 'ஒரேபோடாகப்' போட்டு விட்டு இந்திரா காந்தி போன்ற பிரமுகர்களோடு பகிர்ந்து கொண்ட தனது கையெழுத்துக் 'கோல்மால்'களை விலாவாரியாக சுவாரஸ்யத்துடன் விவரித்தார்.

"எனக்கு இப்ப வயசு 77 ஆறது...சோர்வு எனக்கில்லை...இது மாதிரி சப்போர்ட் இருந்தா -மேடை ஸ்டேண்டை தொட்டுக் காட்டியபடி (அது கூட உருவகம்தான் )-மணிக்கணக்கில் பேசுவேன். நடிப்பேன்...வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் அனுபவிச்சாச்சு...மூணு மணி நேரப் பரீக்ஷையை இரண்டு மணிக்குள்ள எழுதி முடிச்சாச்சு. பாஸாயிடுவேன்...ஆனாலும் பேப்பரை ஹால் சூபர்வைசரிடம் கொடுக்க ஒரு மணி நேரம் காத்துக் கெடக்கணுமாம்!..." என்று கம்பீரமாக காலனுக்கு சவால்விட்ட மார்க்கண்டேயராக மேடையை விட்டிறங்கினார்!
-அதுதான் பாரதி மணி !.......'காலனை காலால் எட்டி உதைக்க' அழைத்த 'பாரதியின் தந்தை' ஆயிற்றே!  அவர் பேசப்பேச எனக்குள் ஷேக்ஸ்பியர் "ஹேம்லட்" நாடகத்தில் Grave-digger கதாபாத்திரம் வாழ்க்கை-பிறப்பு-இறப்பு பற்றி தத்துவம் பேசும் காட்சி நினைவுக்கு வந்தது. அந்தப்பாத்திரத்தில் இவர் நடித்தால் எப்படி இருக்கும், என்பதை நினைத்தும் பார்த்தேன் !
* * *
இந்த மனிதருக்குள் புதைந்து கிடக்கும் அனுபவங்களை வெளி உலகுக்கு யாராவது உணர்த்தினால் நல்லது என்று சில காலம் முன்பு நினைத்தேன்.
அந்த ஏக்கத்தை நிவர்த்தி செய்து விட்டது வம்சி!... .
(இன்னும் வீடியோப்பதிவைப்பார்க்கவில்லை...சீனு ராமசாமி அவர்கள் பேச்சைக் கேட்க விடுபட்டது.)

பாரதி மணி அவர்களின் நூல் வெளியீட்டு விழா தமிழ் இலக்கிய வரலாற்றுப்பாதையில் எழுத்தாளர்கள்-வாசகர்களின் சுமைதாங்கிக் கல்... அந்த மனுஷரிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள்!...கூர்மையான அவதானிப்பு, அன்பு, நேசம், பாசம், நக்கல், எளிமை...எல்லாவற்றுக்கும் மேலாக, உடல் வானளாவப் பறந்துகொண்டிருந்தாலும், கால்கள் தரையில் பாவி நிற்பதுதான் !...

மணி சார் அடுத்த தொகுதியையும் எழுதவேண்டும்-இன்னும் பத்து ஆண்டுகளுக்குப்பின்.......

//2015 ஜனவர் 7-ம் தேதி நடந்த ”புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” புத்தக வெளியீட்டுவிழா பற்றி...//
இரா. குமரகுருபரன்.

Tuesday, November 21, 2017


“இனிமெ உங்களை கூப்பிடமாட்டாங்களா.......அப்பா?” என திடீரென என் மகள் அனுஷா கேட்டாள். ஒருகணம் எதற்கு இந்தக்கேள்வி என திகைத்து, மறுகணமே புரிந்துகொண்டு, “அரசியலைத்தவிர மற்ற எல்லாத்துறையிலும்........ஆர்ட் அன் கல்ச்சருக்கும் வயது வரம்பு உண்டும்மா!” என்று பதிலளித்தேன். நேற்று பிற்பகல் IFFI-2017 Goa International Film Festival துவக்கவிழாவின் நேரலை ஒளிபரப்பு பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அவள் கேட்ட திடீர்க்கேள்வி!

நான் கடைசியாக பங்குபெற்றது 2010 கோவா திரைப்படவிழாவில் Indian Panorama-வுக்கு ஒரு ஜூரியாக பணியாற்றியது தான்! 25 நாட்கள் தில்லியில் தங்கியிருந்து, இருநூறுக்கும் மேற்பட்ட இந்தியப்படங்களிலிருந்து, 26 சிறந்தபடங்களை Goa Indian Panorama-வுக்கு தேர்ந்தெடுப்பது.

அறுபதுகளில் sub-titles வராத காலங்களில் தொடர்ச்சியாக பத்தாண்டுகளுக்கும் மேல் தில்லியில் ஒரு Translator-ஆக கலந்துகொண்டு தினமும் நாலைந்து படங்களாக தேசிய/உலகசினிமாப்படங்கள் பார்த்து அனுபவித்த கணங்கள் மனத்திரையில் வந்துபோயின!

இனி என்னால் செய்யமுடிந்தது நல்ல நினைவுகளை அசை போடுவது தான்!

Photographs below:
1. With Co-Juries in front of Siri Fort Auditorium, New Delhi.
2. Actor Jayaram presenting mementoes to Panorama Juries.
3. Relaxing with other Juries at Goa Film Festival.
4. With Dir. Sivan (Dir. Santhosh Sivan's father) waiting for the
    Car at the Hotel.


PS::::The gentleman in the extreme left (near me) in the first photo is Mr. Bhupendra Kainthalia, at present Director of FTTI, Pune. Anupam Kher was appointed as Chairman of FTTI recently.

Wednesday, November 8, 2017













போனவருடம் இதே நாளில் -- நவம்பர் 8, 2016 -- பெங்களூர் சக்ரா மருத்துவமனையில் முதுகுத்தண்டு ஆபரேஷனுக்காக --  Laperoscopic Decompression Surgery of L4, L5 S6 of Spine -- மாலை ஏழரை மணிக்கு அட்மிட் ஆனேன். அடுத்தநாள் காலை 10.30-க்குத்தான் ஆபரேஷன். பொழுதுபோகாமல் என் அறையிலிருந்த டிவியை பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென இரவு எட்டுமணிக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவியில் தோன்றி இன்றிலிருந்து ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுகின்றனஎன்ற அறிவிப்பை திடீரென அறிவித்தார்.

கள்ளத்தனமான லக்ஷ்மி கடாட்சம்எனக்கு எப்போதுமே இருந்ததில்லையாதலால் மடியில் கனமில்லாமல் இனி கள்ளப்பணம் கொட்டிக்கிடக்கும் பணமுதலைகளும், அரசியல்வாதிகளும் செத்தாண்டா...சேகரு!என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே அவர் பேச்சைக்கேட்டேன்.

ஆனால் என்னைப்பார்க்க வந்த டாக்டர்கள் முகங்களில் பேயறைந்த சாயல் தெளிவாகவே தென்பட்டது. ஐயோ! எப்படி சமாளிக்கப்போகிறோம்!என்ற பீதி தெரிந்தது. மருத்துவமனையெங்கும் அன்றிரவு அதைப்பற்றியே பேச்சு! பல டாக்டர்கள் மோடியை அப்போது நேரில் பார்த்தால், விஷ ஊசி போட்டு உடனே  கொலை செய்யவும் அஞ்சமாட்டார்களெனத் தோன்றியது!

என் மனக்கணக்கில் என்வசம் கையிலிருந்த (அப்போது செல்லாத) ரூ.500/ரூ.1000 நோட்டுக்களின் கூட்டுத்தொகை பத்தாயிரத்தை தாண்டாததால், படுத்தவுடன் தூக்கம் வந்தது!

அடுத்தநாள் காலை என்னை ஆபரேஷனுக்கு தயார் செய்து ஆபரேஷன் தியேட்டருக்கு வீல் ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு போகப்பட்டேன். சினிமாவில் வருவது மாதிரி சிவப்பு விளக்கில் பெரிதாக OPERATION THEATRE என்று எழுதியிருந்தது. ஆனால் என் உறவினர்கள் கூட ஓடி வரவில்லை. என் மகள் மட்டும் இருந்தாள்.

உள்ளே போனவுடன் அனெஸ்தீஷியா டாக்டர்களிடம் Demonetization பற்றிய ஜோக்குகளை உதிர்த்துக்கொண்டிருந்தேன். It was a major surgery;  முதுகின் கீழ்ப்பகுதியில் ஆறு அங்குலத்துக்கு கீறுவதற்கு பதிலாக இரு துளைகள் போட்டு கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மூலம் தண்டுவடத்தை அழுத்திக்கொண்டிருக்கும் எலும்புகளை உடைத்து சரிசெய்வது இந்த ஆபரேஷன்.  ஜெனரல் அனெஸ்தீஷியா ஏற்றியபிறகு, டாக்டர் என்னிடம், ‘இந்த ஆபரேஷன் பற்றி உங்களுக்கு கவலையே இல்லையா?’ என்றுகேட்டார். நான் அவரிடம், அதைப்பற்றி நீங்களல்லவா கவலைப்படவேண்டும்?....என்னைப்பொறுத்தவரை, I am in your safe hands! Why should I worry?' என்று பதிலளித்தேன்.

அப்போது கொடுத்த மயக்கமருந்து சரியாக வேலை செய்கிறதா என்பதைக்கணிக்க ஒரு டாக்டர், “By the way, you didn't tell me your full name? உங்க பேரென்ன?” என்று கேட்டதற்கு, முகத்தில் போட்டிருந்த சுவாசக்குழாயை கையால் விலக்கி, “My name is Narendra Modi!' என்று பதிலளித்தேன். திடுக்கிட்ட டாக்டர்கள் அனைவரும் ஒரே குரலில், “WHAT?" என்றார்கள். திரும்பவும் மாஸ்க்கை கையால் விலக்கிப்பிடித்துக்கொண்டு, “I am Narendra Damodhardar Modi!......The Prime Minister of India!" என்று ஸ்பஷ்டமாக சொல்லிவிட்டு சுவாசக்குழாயை மறுபடியும் மாட்டிக்கொண்டேன். பக்கத்திலிருந்த ஒரு மலையாளி நர்ஸ் சத்தமாக, “எடீ ஸூஸம்மே! ஓடி வரூ! இயாள் எந்து பறயுந்நு...கேக்கு? “ என்று அலறினாள். அது தான் நான் கடைசியாகக்கேட்டது! பிறகு நினைவில்லை!

இந்தசம்பவம் நான் கோமாவில் இருக்கும்போதே ஆஸ்பத்திரி முழுவதும், பின்னர் பெங்களூர் டாக்டர்களுக்கிடையிலும் வாட்ஸப்பில்  வைரலாக பரவியது. ஆபரேஷன் முடிந்து நான் ICU-வுக்கு மாறினதும், ஜூனியர் டாக்டர்கள் ஓரிருவராக என்னை வந்து பார்த்துவிட்டு, நமுட்டுச்சிரிப்புடன் "Oh! You are Narendra Modi!" என்று விசாரித்துவிட்டுப்போனார்கள்! அவர்களுக்கு ஆச்சரியம் என்னவென்றால் ஒரு எண்பது வயது நோயாளி டாக்டர், எனக்கு ஆபரேஷன் நல்லபடியா ஆகுமா இல்லே செத்திருவேனா?, நான் வரும் டோக்யோ ஒலிம்பிக்ஸில் ஓடமுடியுமா?' என்றெல்லாம் பயத்தோடு கேள்விகள் கேட்காமல் திமிர்த்தனமாக என் பெயர் மோடி என்று பதில் சொன்னது தான்!

அடுத்தநாள் காலையிலேயே அறையில் குளிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் ருத்ரப்பா “You're Surgeons' delight. ப்ரெஷர், டயபெட்டீஸ், போன்ற எந்த உபாதைகளும் இல்லாத நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்வது எங்களுக்கு வீட்டில் விளையும் பிஞ்சு காய்கறிகளை வைத்து சுவையாக சமையல் செய்வதைப்போல. உங்களிடமிருந்து கால் அவுன்ஸ் ரத்தம் கூட வீணாகவில்லை. I will remember this surgery for a long time!" என்று பாராட்டினார். அன்று மதியமே வீட்டுக்கு விரட்டி விட்டார்!

ஆஸ்பத்திரியில் என்னை வாஞ்சையுடன் கவனித்துக்கொண்ட நர்ஸ் ஸூஸம்மா! அந்தம்மா பிரியும்போது சொன்ன வார்த்தைகள்:::”அச்சோ! நிங்ஙளெப்பொலெ ஒரு ஆளெ இதுவரெ கண்டிட்டில்ல!”






Wednesday, November 1, 2017




 புகழ்பெற்றிருக்கும் பாரதி மணி மிகச்சிறந்த சமையல்கலைஞரும் கூட. வாழ்வில் எனக்கு எல்லாமும் கிடைத்துவிட்டது என்று பெரும்நிம்மதியுடன் வாழும் இந்த 77 வயது இளைஞரை அந்திமழை இதழுக்காக அவரது வீட்டில் சந்தித்தோம். அவரே செய்த பூசணிக்காய் அல்வாவைக் கொடுத்து சாப்பிடச் சொன்னவர், தன் சமையல், சாப்பாட்டு நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்தார்:

 சமைப்பதற்கு முன்னால் நானொரு நல்ல சாப்பாட்டுராமன். அடையோ தோசையோ எதுவா இருந்தாலும் ஆறேழு சாப்பிடுவேன். என் அம்மா, ‘டேய் சாப்பிட்டது போதுண்டா கை வலிக்குதுடா’ என்று விளையாட்டுக்குக் கூறுவார்கள். சின்ன வயதில் இருந்து மசால்வடை எனக்கு மிகவும் பிடிக்கும். வாரமொருமுறையாவது பண்ணித்தரச்சொல்லி தொந்தரவு செய்வேன். ‘நீ சுண்டெலியா பொறந்திருக்கவேண்டியவண்டா!’ என்று அலுத்துக்கொண்டே எண்ணெய்ச்சட்டி ஏற்றுவாள். அதைச் செய்வதிலும் நான் திறமை வாய்ந்தவன். திரையுலகிலும் அதற்கு மவுசு உண்டு. எடிட்டர் லெனின் போல என்னைப் பார்க்க வரும் சிலர் மசால்வடை செய்திருக்கிறீர்களா என்று கேட்டு சாப்பிடுவார்கள்.


 அம்மா சமைக்கும் போது அவர்களுக்கு உதவி செய்துதான் என் சமையல் கலை வளர்ந்தது. அப்போதெல்லாம் அரைத்துவிட்ட சாம்பார்தான். எனக்கு எதை எப்படி அரைப்பது எவ்வளவு அரைப்பது என்று எல்லாம் அனுபவத்தில் வந்துவிட்டது. என் அம்மாவுக்கு நாக்கு எட்டு முழம். அதே போல் எனக்கும் வளர்த்து விட்டிருக்காங்க. அவங்க யார் ரொம்ப நல்லா சமைச்சாலும் பெரிசா பாராட்ட மாட்டாங்க. அவங்க கிட்ட நல்லா இருக்குன்னு பேர் வாங்கறது கஷ்டம். ஆனா நான் சமைச்சா, எதுவும் கமெண்ட் வராது. நாம தூண்டிக்கேட்டா, ‘ம்ம்ம்ம்., இருக்கு!’ என்று தான் வாயிலிருந்து வரும்! அதுதான் பெரிய அங்கீகாரமா நினைக்கிறேன்.

 சென்னையில் எந்த ஹோட்டலில் சாப்பிட்டாலும் எனக்கு திருப்தி இருக்கிறதில்லை. அதனாலே நானே சமைச்சுகிறேன். எங்க அம்மா செய்யாத சமையலைக் கூட பரிசோதனை செய்திருக்கேன். என் குழந்தைகள் அப்பா கூட்டு, அப்பா பொரியல் என்று பேர் சொல்லும் அளவுக்கு அது ரொம்ப நல்லா வளர்ந்திருக்கு. 1955-ல் நான் டெல்லிக்கு என் அக்கா வீட்டில் போய் தங்கினேன். அங்கேயும் என் சமையல் தொடர்ந்தது. இது சமையலோட முடியலை. நான் சாப்பிடும் ஊறுகாய் எல்லாம் நானே போடறது. பொதுவா ஒருத்தர் சமைக்கிறது சாயந்தரமே ஊசிப்போயிடும்; ருசி இழந்திடும். ஆனால் நான் செய்றது எல்லாத்துக்குமே ஷெல்ப் லைப் அதிகம். அது கைவாக்கு என்று சொல்வார்களே அதுவாக இருக்கலாம். மத்தவங்க புளி இஞ்சி செஞ்சா ஒரு வாரம் வெச்சுக்கலாம். ஆனா நான் செஞ்சா அது இரண்டு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது. சுவை மாறாது.

 இப்ப சாதாரணமா இருக்கிற விஷயங்கள் அந்தக் காலத்தில் பெரிய விஷயங்களாக இருந்தன. உதாரணத்துக்கு சேவை அதாவது இடியாப்பம். சாதாரணமா எல்லா இடங்களிலும் தேங்காய்ப் போட்டு அல்லது எலுமிச்சை போட்டு செய்வாங்க. எங்க ஊர்ல அதாவது நாஞ்சில் நாட்டில் சேவை செய்தால் மூணுவேளையும் அதுதான். இப்ப பச்சை மாவை பிழிந்து வேக வெச்சிடறாங்க. அப்பல்லாம் சேவை நாழியில் பொருந்தறமாதிரி மாவை கொழுக்கட்டை மாதிரி பிடிச்சு ஏராளமா வேகவெச்சு, அப்புறம் அதை நாழியில் திணித்து சேவை செய்வாங்க. 50களில் சின்னப்பிள்ளையாக இருக்கும்போது எனக்கு அது ஒரு வேடிக்கை. ஒரு உலக்கையை, இதற்காகவே செஞ்சு வெச்சிருக்கற ஓட்டையில் செருகி எதிர்முனையில் உட்காரச் சொல்வாங்க. அப்போ மாவு அழுந்தி சேவையா வரும். சேவை, மோர்க்குழம்பு, அப்பள வடாம்தான் காம்பினேஷன். அப்பல்லாம் சேவை பண்றதுன்னா பெரிய நிகழ்வு. போறவ வர்றவங்கல்லாம், உங்க வீட்ல சேவையான்னு கேட்பாங்க.

 அதேபோல் அடுப்புகளும் ஞாபகம் வருது. கொடி அடுப்பு, மரத்தூள் அடுப்பு, டெல்லியில் பயன்படுத்துன இரும்பு வாளியில செஞ்ச நிலக்கரி அடுப்பு... இப்பல்லாம் பொத்தானைத் திருகினா கேஸ் எரியுது... ஆனா அப்ப டெல்லியில் நிலக்கரி அடுப்பு பயன்படுத்துன காலத்தில் நாங்க குடியிருந்த பகுதிகளில் காலையிலயும் மாலையிலையும் அந்த பகுதியே பெரும் புகைமூட்டமா இருக்கும். ஒவ்வொரு வீட்டுலயும் அடுப்பு எரியும். அப்பல்லாம் கடுகு என்றால் பெரிய கடுகுதான். இப்ப தமிழ்நாட்டில் எந்த வீட்டில் போனாலும் பயன்படுத்துற சின்ன கடுகு அந்தக் காலத்தில் ஆவக்காய் ஊறுகாயில்தான் போடுவாங்க. நான் இப்பவும் பெரிய கடுகுதான் வாங்கி சமையலுக்குப் பயன்படுத்தறேன். பெரிய கடுகுன்னு கேட்டாதான் தருவான். அதுக்குன்னு ஒரு தனி ருசி, மணம் உண்டு. நல்லா ஊறினத ஒவ்வொண்ணா எடுத்து சாப்பிடறது தனி ருசி.

 எழுத்தாளர் நாஞ்சில்நாடன் இங்கே என் வீட்டில் வந்து தங்குவார். எனக்கு அவரைப் பிடிக்கும். அதைவிட என்னை அவருக்குப் பிடிக்கும். அவர்கிட்ட பேசுன ஒரு சமாச்சாரம் அப்பக்கொடி. மேற்குத் தொடர்ச்சி மலையில் வருசத்துக்கு இரண்டுமாசம்தான் இது விளையும். அதை பெரிய பாரவண்டியில ஏத்திக்கிட்டு வருவாங்க. இந்தக் கொடியை பிராமண அக்ரஹாரங்களில் பயன்படுத்துவாங்க. அதை ஓட்டிக்கிட்டு அக்ரஹாரத் தெருவுக்கு உள்ளே வந்தா, அரை மணி நேரத்தில் முழு வண்டி சரக்கும் வித்துப்போயிடும். காலி வண்டிதான் திரும்பிப் போகும். வண்டிக்காரன் கை நிறைய பணத்தை எண்ணிக்கிட்டே திரும்பிப்போவான். அந்த கொடியின் இலையை சின்னதா வெட்டி, வேட்டிகளில் போட்டு, நிழலில் உலர்த்தணும். ரெண்டாவது நாளில் இருந்து ஒரு கெட்ட நாற்றம் வீச ஆரம்பிக்கும். தெருவில் நடமாட முடியாது. இந்த கொடி கெட்ட நாற்றம் அடிக்கிறதுக்கு காரணமா ஒரு வேடிக்கை கதை உண்டு. ராவணன் காட்டில் சீதையை தேடிப்போனப்ப இந்த செடி மேல குசு விட்டுட்டானாம். அதனால் இந்த செடிக்கு கெட்ட நாற்றம் பிடிச்சுகிட்டுதாம். ஆனால் அந்த பேருக்கு எந்த குறையும் வைக்காம அப்படி ஒரு நாற்றம்... அதனால் இந்த கொடிக்கு இன்னொரு பேரு ராவணன் குசு! அது நல்ல உலர்ந்தபிறகு அளவில் மிகவும் குறைந்துவிடும். அந்தப் பொடியை எடுத்து பாட்டில்களில் வெச்சிக்கிட்டு, தாளிக்கப் பயன்படுத்துவாங்க. தேங்காய் அரைச்ச குழம்புல, மோர்க்குழம்புல தாளித்தால் ஆஹா... அதன் மணம் எப்படி இருக்கும் தெரியுமா? ராவணன் குசுவா நாறினது, என்ன மாயமோ தெரியாது..... சமையலில் பெரும் மணம் தரக்கூடியதா மாறிடும். இந்த அப்பக்கொடி எங்க நாஞ்சில் நாட்டுப் பகுதியில் மட்டும்தான் உண்டு. ஆனா இப்ப அது வழக்கொழிஞ்சு போச்சு. நான் எதுக்கு இதைச் சொல்றேன்னா அந்த காலத்தில் எல்லா சீசன்லயும் வீட்டுல இருந்த ஒரு பொருள் இப்ப எப்படி இல்லாமல் போயிடுச்சுன்னு குறிப்பிடறதுக்காகத்தான்.

மணிரத்னத்தின் ‘கடல்’  படப்பிடிப்புக்காக திருச்செந்தூர் போனப்ப, இந்த அப்பக்கொடியை அந்த கோயிலில் இருக்கவங்க -- நாங்க முக்காணியர் என்று சொல்லுவோம் -- உபயோகப்படுத்துவாங்கன்னு கேள்விப்பட்டு, நான் அங்கே இருந்தவங்க எல்லார்கிட்டேயும் கேட்டேன். கடைசில ஒரு பையன் கொண்டுவந்து கொடுத்தான். அவன் சின்ன பையில் கொண்டு வந்திருந்தான். அவன் அப்ப என் சொத்துல பாதியைக் கேட்டாலும் எழுதிக் கொடுத்திருப்பேன். அந்த சின்னப்பையன் காலில் விழலாமா என்று தோன்றுகிற மாதிரி அது ஒரு அபூர்வம் எனக்கு. பின்ன அத தங்க பஸ்பம் பயன்படுத்தற மாதிரி ஆறுமாசம் வெச்சிருந்து பயன்படுத்தினேன். ஏன்னா அதன் ருசி என் நாக்குல அப்படியே இருக்கு. எனக்கு அப்பக்கொடி மட்டும் ரெகுலரா யாராவது சப்ளை பண்ணா.. தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் சுரண்டினது போக மீதி இருக்கிறத எழுதி வெக்க நான் தயாரா இருக்கேன்.

 தென்னிந்திய உணவு வகைகள் சமைக்கும்போது பூண்டு, பட்டை போன்றவற்றை பயன்படுத்தமாட்டேன். எப்பவாவது பூண்டு ரசம் வெச்சால் மட்டும் பூண்டுக்கு சமையலறையில் அனுமதி உண்டு. என் சமையலில் பெருங்காயம் தூக்கலா பயன்படுத்துவேன்.

 எங்க ஊர்ல நான் சின்ன வயசுல இருக்கும்போது வடசேரில குண்டுப்போத்தி ஓட்டல் உண்டு. எங்க அம்மா 2 ரூபாய் கொடுப்பாங்க. ஒருவாரத்துக்கு தேவையான காய்கறிகள் வாங்கிட்டு, மீதி இரண்டணாவில் அந்த ஓட்டலில் ரசவடையும் மசால்தோசையும் காப்பியும் சாப்பிடுவேன். ரசவடைன்னா தமிழ்நாட்டில் எல்லா பவன்களிலும் நேற்று பண்ணி மிஞ்சிப்போன வடையை ரசத்தில் ஊறவைத்துத் தர்றான். ரசவடை என்கிற பெயருக்கே இது அவமானம்! மாவு அப்பவே அரைச்சு செய்யணும்! ரசவடைன்னா பெரிசா ஊறி இருக்கும். அதை ஒரு விரலால் குத்தினா பூ விரியறா மாதிரி விரியும். அந்த இடைவெளியிலே சட்னியை விட்டுட்டே போவான். அந்த சட்னியை குடு குடுன்னு உள்வாங்கிடும் அந்த வடை. சொர்க்கத்துக்கெல்லாம் போகவே வேண்டாம்! அதுல ஒரு துண்ட விண்டு சாப்பிட்டா போதும்! நான் சமையலை ஆராதிக்கிறவன்.

நாஞ்சில் நாட்டு அவியலுக்கும் மற்ற ஊர் சமையலுக்கும் என்ன வித்தியாசம்னா, தயிர் சேர்ப்பாங்க. அதனால இந்த அவியலை இலையில் வைக்கும்போது ஒரு நீரோட்டம் உருவாகி அது சோறை நோக்கி ஓடிவரும். ஆனா எங்க ஊர் அவியலோ, என்னை எடுத்து சாப்பிடுன்னு சொல்லி கம்பீரமா இலையில் உட்கார்ந்திருக்கும்! இப்பவும் நான் டெல்லியில் இருக்கிற என் பொண்ணு வீட்டுக்குப் போனா, வேலைக்கார அம்மாவுக்கு லீவு கொடுத்துட்டு நானே தான் சமைப்பேன்! இன்னொருமுறை இவரது பூசணிக்காய் அல்வாவை சாப்பிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டு விடைபெற்றோம்.

 நாஞ்சில்நாட்டு அவியல்: எங்க ஊர் அவியலில் தயிர் சேராது. புதுப்புளி சின்ன உருண்டை, போதுமான உப்பு, மஞ்சள் தூள், கொஞ்சம் சீனி. நாட்டுக்கறிகாய்கள் (சேனை, புடலை, வாழைக்காய், முருங்கை, சீனி அவரைக்காய், நாட்டுக் கத்தரிக்காய், வெள்ளைப் பூசணி, வெள்ளரிக்காய்) பயன்படுத்தலாம். பச்சைப்பட்டாணி, காலிபிளவர் என்று போட்டு இப்போது கொடுமை செய்கிறார்கள். காரட் பயன்படுத்தலாம். அதன் சிவப்பு வண்ணத்துக்காய் போனால் போகிறதென்று அதற்கு மட்டும் அனுமதி. இந்த நாட்டுக்கறிகாய்களை ஒண்ணே கால் இஞ்ச் கனத்தில் நீளமாக வெட்டிக்கொள்ளுங்கள். முருங்கைக்காய் இரண்டு இஞ்ச் நீளத்துக்கு வெட்டவும். ஒருமூடித்தேங்காய், 4,5 பச்சை மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம். தேங்காய் விழுதை ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவேண்டும். காய்கறிகளை திக்கான புளிக்கரைசலுடன் கலந்து, போதுமான தண்ணீர் வைத்து, காய்கறிகளை அவற்றிற்கு ஏற்ப வேக வைக்கணும். கடைசியில் இறக்கி வைக்கும்போது 3,4 கரண்டி தேங்காய் எண்ணையை அதன் தலையில் யோசிக்காமல் ஊற்றணும். கறிவேப்பிலை எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம்!

 (சந்திப்பு: செல்வன் )

 (அந்திமழை மார்ச் 2015 இதழில் வெளியான நேர்காணல்)

Sunday, October 8, 2017

"புள்ளிகள் கோடுகள் கோலங்கள்" -பாரதி மணி. ”ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஆல்ப்ஸ் மலையை பார்த்துக்கொண்டு ஜெனிவாவில் இருப்பதைவிட மின் கம்பங்கள் மீது கால் தூக்கி சிறுநீர் கழிக்கும் நாய்களை பார்த்துக்கொண்டும், ஆட்கள் வந்தால் ஒதுங்கும் மாடுகளையும் ஒதுங்காத மனிதர்களையும் பார்த்துக்கொண்டு சென்னை நகர வீதிகளில் அலையவே பிடித்திருக்கிறது”. ”நான் ஒதுங்கியும் இருக்கவில்லை, ஓய்விலும் இருக்க வில்லை. எனக்கு பிடித்தமான விஷயங்களை,பிடித்தமான மனிதர்களோடு பிடித்தமான வகையில் செய்துகொண்டே இருக்கிறேன்” இளைஞர்(!) திரு. ”பாரதி மணி” அவர்களின் யதார்த்தம். ”என்னமா அனுபவித்து வாழுராரு இந்த மனுஷன், ம்ம்ம்ம், நாமளும் இருக்கமே!!!!" பொறாமையையும் அங்கலாய்ப்பையும் சேர்த்து கொண்டுவரும் சம்பவங்கள்,... நாம் நன்றி சொல்லவேண்டிய இருவர் அவருடைய அக்கா "திருமதி.பகவதி கணபதி" மற்றும் அத்தான் "திரு,கணபதி". இவர்கள் இருவர் இல்லையென்றால் நமக்கு இந்த புத்தகம் கிடைக்க சாத்திய கூறுகள் குறைவு. பாட்டையாவும் புத்தகத்தை அவர்களுக்கே சமர்ப்பித்திருக்கிறார். “ஆமாம், நான் ஓட்டைக்காலணா... அரையணா பேர்வழிதான்” என்று தனக்கென ஒரு லட்சுமண ரேகையை கிழித்துக்கொண்டு 50 ஆண்டுகால தில்லி வாழ்க்கையில் தனக்கு கிடைத்த ”இரண்டரையணா” வாய்ப்புகளை புறந்தள்ளியதை விவரித்திருக்கும் “Mutton Tallow Import" சம்பவம் புத்தகத்தில் எனக்கு பிடித்த பகுதி ( கட்டுரை : நீரா ராடியாவும் நான் தில்லியில் செய்யாத திருகு தாளங்களும்). நாகர்கோவில் -> தில்லி -> சென்னை : காலச்சக்கரத்திலேறி ஒரு சுற்று வந்த உணர்வு. பார்வதிபுரத்தில் தொடங்கி விருகம்பாக்கத்தில் முடியும் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரையிலான அனுவங்கள். திருவாங்கூர் சமஸ்தானத்து மன்னர் விரதம் முடிக்க சுசீந்திரத்திலுருந்து கிளம்பும் துப்பாக்கி சத்தம் முதல், ”திங்கள் கிழமை சாஸ்திரி விரதம்” வரை எத்தனை கேள்விப்படாத தகவல்களை புத்தகம்முழுவதும் தெளித்திருக்கிறார். சில கட்டுரைகளில் மையக்கருவை விட துணைத்தகவல்கள் படு சுவாரஸ்யம்.திருவாடுதுறையாரின் தோடியும் , வெள்ளி டம்ளரும்... (கட்டுரை : "நாதஸ்வரம் ‍‍‍, என்னை மயக்கும் மகுடி".) ("சங்கீத கோட்டி"யான தனக்கு மிகவும் பிடித்த கட்டுரை என்று நெகிழ்கிறார் "பாட்டையா" வார்த்தைக்கு "காப்பிரைட்" கேட்கும் சுகா...) ”ஷேக் ஹஸீனா(பங்களாதேச பிரதமர்), அண்ணா, எம்.ஜி.ஆர் இம்மூவரையும் அவர்கள் பதவிக்கு வந்தபின் ஒருமுறையேனும் நேரில் சென்று பார்த்ததில்லை! நேரில் பார்க்கப்போயிருந்தால், என்னை அடையாளம் கண்டுகொண்டிருப்பார்களா?” “தில்லி வந்தால் அவர் என்னையும், பெங்களூர் வந்தால் நான் அவரையும் தவறாது சந்திப்போம். சென்னையில் நிரந்தரமாக தங்கியபிறகு அவரை பார்ப்பது படிப்படியாக குறைந்துபோனது, சினிமா சான்ஸ்க்குக்காக நம்மகிட்ட நெருக்கமா இருக்குறாரோன்னு அவரு நெனச்சிடக்கூடாதில்லையா... “சுஜாதா... சில நினைவுகள்” கட்டுரையில் வெளிப்படும் மிடில் கிளாஸ் மனப்பான்மை.... படிக்கும்போது நம்மிடையே பல உணர்ச்சி ஓட்டங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள். மணிமேடை சுதர்ஸன் ஸ்டோர்ஸ் சுந்தரமையர் பையன் வேப்பமூடு ஜங்ஷன் மூலம் “புளியமரத்தின் கதை” சுந்தரராமசாமியானது. சு.ராவை சந்தித்து பேச வந்த க.நா.சு. பின்னாளில் தனக்கு மாமனாரானது. மாமனாருக்கு கெட்டிச்சட்னியுடன் ரசவடை வாங்கிவர வடசேரி குண்டுபோத்தி ஓட்டலுக்கு வாடகை சைக்கிளில் சென்றது. பின்னாளில் தான் செய்த மசால்வடையை மாமனார் கேட்டுவாங்கி சாப்பிடுவதை தள்ளி நின்று ரசித்தது. கா.நா.சு. அவர்களோடு பல வருடங்கள் ஒரே வீட்டில் சச்சரவுகள் இன்றி வாழ்ந்தது.... நிகம்போத்காட் இடுகாட்டில் மகனாக க.நா.சு வின் இறுதி சடங்குகளை செய்தது... ”சி.சு.செல்லப்பாவும், மௌனியும் வாய்நிறைய “மாப்பிளே” என்று கூப்பிடுவார்கள். எனது சொந்த மாமனார் ஒருதடவை கூட “மாப்பிளே”ன்னு அழைத்ததில்லை" என்று குறைபட்டுக்கொள்ளும் பாட்டையாவிற்க்கு க.நா.சு தன்னை மகனாகத்தான் நினைத்தார் என்பது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.., ”தில்லியில் நிகம்போத்காட் சுடுகாடு” : இப்புதகத்திலேயே எனக்கு ஆக பிடித்த கட்டுரை.. பாட்டையாவை தெரிந்துகொள்ள இந்த ஒரு கட்டுரைப்போதும். தமிழகத்திலிருந்து தில்லி செல்லும் நடிக நடிகைகள், வித்வான்கள்,எழுத்தாளர்கள் செய்யும் அலம்பல்கள் . சிவாஜியின் “பாட்டில்(குழந்தை)” பற்றிய அக்கறையான கேள்வி, எம்.எல்.வி அம்மையார் ஆசைப்பட்ட ”டீச்சர்ஸ் சாய்ஸ்” (காலி)விஸ்கி பாட்டில்.... ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் உடனான சந்திப்பின்போது சந்திரபாபுவால் ஏற்பட்ட குழப்பம், இன்னும் பல பல விஷயங்கள்..... ”விமர்சகர் சுப்புடு” - ”நிதர்ஸன சுப்புடு”வாய் அறியபடும் “சுப்புடு சில நினைவுகள்” கட்டுரை. அரங்கேறாத நாடகத்திற்க்கு ”ஸ்டேட்ஸ்மென்” பத்திரிக்கையில் அவர் எழுதிய விமர்சனம். ["கொஞ்சம் வெற்றிலை சீவல் அப்புறம் சுதா ரகுநாதன் கேசட்”. உங்களை அத்துவானக்காட்டில் கொண்டுவிட்டால் நீங்கள் உங்களோடு எடுத்துச்செல்ல விரும்புவது என்ன என்ற கேள்விக்கு சுப்புடு சொல்லிய பதில் என்னை நெகிழவைத்தது என்று பல வருடங்களுக்கு முன்பு வார இதழ் பேட்டி ஒன்றில் சுதா ரகுநாதன் சுப்புடு அவர்களைப்பற்றி சிலாகித்திருந்தார். ] (சுப்புடு பற்றிய) அதே கேள்வியை பாட்டையாவிடம் கேட்டால் இன்னும் வில்லங்கமான பதில்கள் கிடைத்திருக்ககூடும். சத்யநாராயண் சின்ஹாவை 51வது நபராக இந்திராகாந்தியின் மந்திரிசபையில் நுழைக்க முடிந்த சாமர்த்தியம். செம்மீன் திரைப்படத்திற்க்கு தேசியவிருது கிடைக்கச்செய்ய எடுத்த முயற்ச்சிகள், “நண்பா, நண்பா” திரைப்படத்திற்க்கான சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை தனதாக்கிகொள்ள 200% வாய்ப்பிருந்தும் அதனை பயன்படுத்தாதது,.... “தன்னால் எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதமுடியாவிட்டாலும், எழுதிய விஷயங்களில் முடிந்தவரை முப்பரிணாமங்களையும் காட்டியிருக்கிறார். புத்தகத்தில் குறையாக (எனக்கு) பட்ட விசயம். பிற்பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யம் குறைவான சில கடிதங்கள் மற்றும் மதிப்புரைகள்..............(படித்ததில் ஆக பிடித்தது சுகாவுடையது...) பாட்டையா - "Yes. you are a blessed Soul!!!!" வடசேரி குண்டுபோத்தி ஓட்டலில் தங்களோடு ரசவடை சாப்பிட வேண்டும்..... எப்ப போகலாம்???? Bharati Mani ************************************* புள்ளிகள் கோடுகள் கோலங்கள் பாரதிமணி வம்ஸி புக்ஸ் ISBN # 978-93-84598-06-8 விலை : ரூ. 550. ************************************* www.vazhippokkann.blogspot.com